கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோதவாடி கிராமத்தில் 19 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவரது பாட்டி வீடு திருப்பூர் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ளது. அங்கு சென்று வரும்போது, அதே பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியுடன் வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதுகுறித்து அறிந்த பெற்றோர் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று பொள்ளாச்சி பேருந்து நிலையத்துக்கு சென்ற காதலர்கள் நீண்ட நேரம் பேசி கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அவர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் அவர்களது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே பொதுமக்கள் உதவியுடன் அவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.