மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியை சேர்ந்தவர்கள் சபீர் – சனியா தம்பதி. இவர்கள் போதை மருந்துக்கு அடிமையானவர்கள். இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் இருந்த நிலையில் அதில் இரண்டு பேரை விற்று போதை பொருள் வாங்க பணம் தயார் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த தம்பதி தங்களின் ஒரு பிள்ளையுடன் சபீரின் சகோதரி ரூபினா வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர் மற்ற இரண்டு பிள்ளைகளை பற்றி கேட்டபோது சனியா போதை பொருள் வாங்குவதற்காக விற்று விட்டதாக கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரூபினா காவல் நிலையத்தில் புகார் அளிக்க வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் தம்பதியையும் பிள்ளைகளை விற்க உதவி செய்த மற்ற இருவரையும் கைது செய்ததோடு கடந்த மாதம் 14 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மாத பெண் குழந்தையை மீட்டு உள்ளனர். மேலும் 60 ஆயிரம் ரூபாய்க்கு கடந்த வருடம் மே மாதம் விற்கப்பட்ட இரண்டு வயது சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.