திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல் சிங்கம்பாறை சாலையில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் 18-ஆம் தேதி வாலிபர்கள் பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் தராமல் உரிமையாளருடன் தகராறு செய்தனர். இதனையடுத்து அவர்கள் உரிமையாளர் உட்பட இரண்டு பேரை அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சீதபற்பநல்லூரை சேர்ந்த ரங்கசாமி, கருத்தப்பாண்டி, விஜய் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களின் நண்பரான குமார் அதே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து பணியில் இருந்து நின்று விட்டார்.

நேற்று குமார் தனது நண்பர்களுடன் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு சென்று வேலை பார்த்துக் கொண்டிருந்த வேணிராஜ் என்பவரை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் காயமடைந்த வேணிராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் குமார் உள்ளிட்ட மூன்று பேரை தேடி வருகின்றனர்.