கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடந்த இந்தியா – பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை மோதலில், பாகிஸ்தான் தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹானின் பழைய பேச்சு அவர்க்கே வினையாக முடிந்தது. போட்டிக்கு முன்னதாக, ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சைத் தான் சிக்ஸர்களாகப் பறக்கவிடுவேன் என ஒரு ஆவணப்படமே எடுத்துப் பெருமை பேசிக் கொண்டிருந்தார் ஃபர்ஹான். ஆனால், களத்தில் இறங்கிய அவர் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் 4 பந்துகளைச் சந்தித்து ஒரு ரன் கூட எடுக்காமல் ‘டக்-அவுட்’ ஆகி வெளியேறினார்.

​இதைப் பார்த்த நெட்டிசன்கள், “அடுத்த ஆவணப்படத்துக்கு டைட்டில் ‘ஜீரோ’ன்னு வைங்க” என அவரைத் தாறுமாறாகக் கலாய்த்து வருகின்றனர். அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளரான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமே, “சிக்ஸரும் இல்லை, டாக்குமெண்டரியும் இல்லையா? இது எப்படி சாத்தியம்?” என எக்ஸ் (X) தளத்தில் கிண்டலடித்துள்ளது. இந்தியா நிர்ணயித்த 176 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான், முதல் ஓவரிலேயே ஃபர்ஹானை இழந்து தடுமாறியது.

அடுத்த ஓவரிலேயே பும்ரா அதிரடியாக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த, 13 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி நிலைகுலைந்து போனது. “வாய் சவடால் விட்டால் இப்படித்தான்” என இந்திய ரசிகர்கள் இந்த வெற்றியை ஆக்ரோஷமாகக் கொண்டாடி வருகின்றனர்.