டைரக்டர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக கொண்டு ரிலீஸ் ஆன படம் “ஆதிபுருஷ்”. இப்படத்தில் ராமர் வேடத்தில் பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்து உள்ளனர். கடந்த 16ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் அதே சமயத்தில் விமர்சனங்களும் வருகிறது. இந்த படம் ரூ.300 கோடி வசூலை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஆதிபுருஷ் படத்தில் சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கக்கோரி இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்திலும் போராட்டம் நடந்தது.

இந்த நிலையில் ஆதிபுருஷ் படத்தை உடனடியாக தடைசெய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அதில் “இந்த படத்தில் ராமர், அனுமனை வீடியோ கேம் கதாபாத்திரம் போல சித்தரித்தும், அவதூறு செய்யும் வகையில் படத்தில் வசனம் இடம்பெற்றிருப்பதும் உலகத்தில் உள்ள இந்தியர்கள் மனதை புண்படுத்துகிறது. சனாதன தர்மத்தை அவமதிக்கும் இந்த படத்தை உடனே தடைசெய்ய வேண்டும். அதோடு ஓடிடி தளங்களில் ஆதிபுருஷ் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆதிபுருஷ் படத்திற்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.