இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் பரபரப்பான போக்குவரத்து முனையங்களில் ஒன்றான டெல்லி ஆனந்த் விஹார் பகுதியின் தற்போதைய நிலையைப் பிரதிபலிக்கும் காணொளி ஒன்று எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கு பார்த்தாலும் குப்பைகள், எச்சில் கறைகள் மற்றும் துர்நாற்றம் வீசும் சுகாதாரமற்ற சூழல் என அந்த இடமே ஒரு திறந்தவெளி குப்பை மேடு போல காட்சியளிக்கிறது. இந்தியாவின் தலைநகரிலேயே நிலவும் இந்த அவல நிலை, பொதுமக்களின் சுகாதாரப் பொறுப்புணர்வு (Civic Sense) எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை உலகுக்கு அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டியுள்ளது.



ஒருபுறம் உலக அரங்கில் இந்தியா வல்லரசாக உருவெடுத்து வருவதாக நாம் பெருமைப்பட்டுக் கொண்டாலும், அன்றாட பொது ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்பில் நாம் இன்னும் பின் தங்கியே உள்ளோம் என்பது வருத்தமளிக்கிறது. ஆங்காங்கே குப்பைத் தொட்டிகளை வைக்கத் தவறிய அரசு நிர்வாகம் ஒருபுறம் இருந்தாலும், பொது இடங்களைச் சிதைக்கும் மக்களின் கீழ்த்தரமான செயல்கள் இந்தியாவை ஒரு “நாற்றமெடுக்கும் இடமாக” மாற்றி வருவதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. உலகளாவிய பொதுப் பொறுப்பு குறியீடுகளில் இந்தியா தொடர்ந்து பின்தங்கி வருவது, நமது சமூக ஒழுக்கம் மற்றும் சட்டங்களை மதிக்கும் பண்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது.