பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற விசேஷத்தில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், கிராமத் தலைவருமான (Sarpanch) ஜர்மல் சிங், மர்ம நபர்களால் மிக அருகாமையில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டார். திருமண கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், ஜர்மல் சிங்கின் தலையை இலக்காகக் கொண்டு துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். வெறும் 13 வினாடிகளுக்குள் இந்த முழுத் தாக்குதலும் நடந்து முடிந்துள்ள விதம் அங்கிருந்தவர்களை உறைய வைத்துள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பான சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்போது எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தலையில் பலத்த காயமடைந்த ஜர்மல் சிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவத்திற்குப் பல கேங்ஸ்டர் குழுக்கள் பொறுப்பேற்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில், பஞ்சாப்பில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. தலைமறைவாக உள்ள கொலையாளிகளைப் பிடிக்க பஞ்சாப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.