கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி பாரத் சோடா யாத்திரை எனும் பெயரிலான இந்திய ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி எம்பி ஆன ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார். இந்த யாத்திரையானது மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம், உத்தரப்பிரதேசம், கேரளா, தமிழகம், கர்நாடகா, டெல்லி போன்ற பல்வேறு மாநிலங்களின் வழியே கடந்து சென்று கடந்த 6-ம் தேதி அரியானாவிற்குள் யாத்திரை நுழைந்தது. இதனைத் தொடர்ந்து பஞ்சாபில் இந்த யாத்திரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 

 

இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் எம்.பி சந்தோக்சிங் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டார். இதனால் அன்றைய தினம் யாத்திரை ரத்து செய்யப்பட்டது. அதன் பின் ஜலந்நகரில் இருந்து நேற்று முன்தினம் மீண்டும் பாதயாத்திரை தொடங்கியுள்ளது. பஞ்சாபின் ஹோசியார்ப்பூர் பகுதியில் இன்று காலை பாதயாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த யாத்திரையில் ராகுல் காந்தியை ஒருவர் திடீரென ஓடி வந்து கட்டிப்பிடித்துள்ளார். உடனடியாக அருகில் இருந்த கட்சி தொண்டர்கள் அவரை விலக்கி அப்புறப்படுத்தி உள்ளனர். இதனால் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.