பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டமன்றக் கட்டிடத்திற்குள் கைபர் பக்துன்க்வா முதல்வர் சோஹைல் அப்ரிடி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நுழைந்ததை அடுத்து, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சட்டமன்றத்திற்குள் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் அப்ரிடி மற்றும் அவரது ஆதரவாளர்களை தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெளியான காணொளிகளில், பாதுகாப்புப் பணியாளர்கள் கைபர் பக்துன்க்வா முதல்வரின் பிரதிநிதியும், மூத்த அமைச்சருமான மீனா கான் அப்ரிடியை தள்ளி அடித்து வெளியேற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தனது கட்சி (பாகிஸ்தான் தெஹ்ரிகே-இ-இன்சாஃப் – பிடிஐ) தொழிலாளர்களை பாதுகாக்க முயன்ற போது, பாதுகாப்புப் பணியாளர்கள் மீனா கானை இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பிடிஐ கட்சியைச் சேர்ந்த மற்றொரு ஊழியர் தலையிட்டு, அவரை வெளியே இழுத்துச் செல்லும் முயற்சியை தடுத்தார்.

 

இந்தச் சம்பவத்தின் போது, சோஹைல் அப்ரிடி, “நீங்கள் அவரைத் தாக்குகிறீர்கள், அவர் உங்கள் தந்தையின் சொத்தா?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பியதாகவும், மீனா கான், “அவர் என் முதல்வர்; அவரை இப்படி நடத்த உங்களுக்கு எப்படி துணிவு வருகிறது?” என்று பாதுகாப்புப் பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

பஞ்சாப் சட்டமன்றத்திற்குள் முதலில் அப்ரிடி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு நுழைவு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர், முன்கூட்டியே அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே நுழைவு அனுமதி வழங்கப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகம் எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், அப்ரிடியின் ஆதரவாளர்கள் பெருந்திரளாக சட்டமன்றத்திற்குள் நுழைந்ததால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

இதற்கிடையே, வெள்ளிக்கிழமை இரவு லாகூரில் உள்ள லிபர்ட்டி சௌக் பகுதியில் சோஹைல் அப்ரிடிக்கு நுழைவு அனுமதி மறுக்கப்பட்டதாக டான் செய்தி வெளியிட்டுள்ளது. அங்கு பிடிஐ சார்பில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடிஐயின் முன்மொழியப்பட்ட தெரு போராட்ட இயக்கத்தை முன்னெடுப்பதற்காக அப்ரிடி லாகூருக்கு வந்திருந்தார். மாலையில் லிபர்ட்டி ரவுண்டானாவில் பொதுநிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பஞ்சாப் காவல்துறை அவர்களின் நடவடிக்கைகளை தடுத்ததாக பிடிஐ பொதுச் செயலாளர் சல்மான் அக்ரம் ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், தானும் கைபர் பக்துன்க்வா முதல்வரும் லிபர்ட்டி சௌக்கில் இருந்தபோதும், போலீசார் நகர்வை தடுத்ததாக தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு, பிடிஐ சார்பில் வெளியிடப்பட்ட காணொளியில், கட்சித் தலைவர் லத்தீப் கோசாவின் வீட்டிற்கு அப்ரிடி வந்தபோது, அவரது வாகனத்தின் மீது கட்சி ஆதரவாளர்கள் மலர்களை தூவிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ரவி டோல் பிளாசாவை கடந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்ரிடி, தன்னுடன் வந்த பல வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், மண்டி பஹாவுதீனில் இருந்து பெரா வழியாக லாகூருக்கு வந்த கட்சித் தொழிலாளர்கள் வழிமறிக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும், சாலைகள் மூடப்பட்டதுடன், பலர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 

பிடிஐ நிறுவனர் இம்ரான் கான் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அப்ரிடி, “இம்ரான் கான் தேசிய ஒற்றுமையின் சின்னம். அவர் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம் அளிப்பவர்” என்று கூறினார்.