மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் கலை நிகழ்ச்சியில், மாணவிகள் துண்டுகளைப் போர்த்திக்கொண்டு ஆடிய நடனம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தையும், கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ‘ஜீவன் ஜோதி மாடல் பள்ளி’ (Jeeban Jyoti Model School) என்ற பெயரிலான பேனர் வைக்கப்பட்ட மேடையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதில் ஒரு குழுவாகப் பங்கேற்ற மாணவிகள், ஆடைக்கு மேல் துண்டுகளை (Towels) சுற்றிக்கொண்டு சினிமாப் பாடல் ஒன்றிற்கு நடனமாடுகின்றனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவியதைத் தொடர்ந்து, பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிகின்றன. குறிப்பாக, பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் முன்னிலையில் இத்தகைய ‘துண்டு நடனம்’ அரங்கேற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், கல்வி நிறுவனங்களில் ஒழுக்கமும் பண்பாடும் போதிக்கப்பட வேண்டும்; மாறாக இதுபோன்ற தர்மசங்கடமான நிகழ்ச்சிகளை அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது எனப் பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் “பள்ளி நிர்வாகம் இதற்கு எப்படி அனுமதி அளித்தது?” “மாணவர்கள் மத்தியில் கலாச்சாரச் சீரழிவை ஏற்படுத்துவதா?” “சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்ற ரீதியில் ஆயிரக்கணக்கான கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

இந்தச் சர்ச்சை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் உலா வருகின்றன. ஒரு தரப்பினர், இது பள்ளியால் நேரடியாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி அல்ல என்றும், ஒரு உள்ளூர் கிளப் நடத்திய விழாவிற்குப் பள்ளியின் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

இருப்பினும், இது குறித்து ஜீவன் ஜோதி மாடல் பள்ளி நிர்வாகம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் அளிக்கவில்லை. இந்த நிகழ்ச்சி எப்போது நடைபெற்றது? இதற்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? என்பது குறித்துக் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் எல்லை மீறும் இதுபோன்ற நிகழ்வுகள், கல்வி நிலையங்களின் மாண்பைச் சிதைப்பதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.