திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அணைபதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் விஷ்ணு அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறான். தினமும் சிறுவன் பேருந்தில் பள்ளிக்கு சென்று வந்தான். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளி முடிந்ததும் விஷ்ணு குன்னத்தூர் பேருந்து நிலையத்திற்கு வந்தான் அப்போது தடம் எண் 10 டவுன் பேருந்து நின்று கொண்டிருந்தது. அதில் கூட்டம் அதிகமாக இருந்ததால் விஷ்ணு அணைப்பதி வழியாக செல்லாத தடம் எண் 10 நம்பர் கொண்ட பேருந்தில் விஷ்ணு ஏறியுள்ளார்.

சிறிது தூரம் சென்றதும் பேருந்து வேறு ஒரு தடத்தில் செல்வதை பார்த்த சிறுவன் அதிர்ச்சியில் பேருந்தை நிறுத்துமாறு கண்டக்டரிடம் கெஞ்சினான். ஆனால் பலமுறை கூறியும் பேருந்து நிறுத்தாமல் சென்றதால் என்ன செய்வது என்று அறியாமல் விஷ்ணு ஓடும் பேருந்தில் இருந்து கீழே குதித்து படுகாயமடைந்தான். அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட பேருந்தில் பணியில் இருந்த டிரைவர் மற்றும் கண்டக்டர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.