வேலூர் மாவட்டத்தில் உள்ள காலாம்பட்டு கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சூர்யா அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று முன்தினம் மதியம் 1.50 மணிக்கு தமிழ் பாட வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நெஞ்சுவலிப்பதாக சூர்யா கூறினான். சிறிது நேரத்தில் சூர்யா முன்பக்க மேஜை மீது மயங்கி விழுந்து அசைவற்று கிடந்தான்.

இதுகுறித்து சூர்யாவின் பெற்றோருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆம்புலன்சில் வந்த மருத்துவ குழுவினர் மாணவனை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு நாடிதுடிப்பு குறைவாக உள்ளது என தெரிவித்தனர். இதனால் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குள் சிறுவன் உயிரிழந்து விட்டான்.

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியார் கூறியதாவது, ஏற்கனவே சூர்யாவிற்கு 8 வயது மற்றும் 12 வயதிலும் இரு முறை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. வகுப்பில் பலவீனமாக இருந்த சூர்யா யாரிடமும் கடுமையாக நடந்து கொள்ள மாட்டார். மேலும் நெஞ்சுவலி இருப்பதால் சூர்யா பள்ளிக்கு தொடர்ந்து வருவதில்லை. அவ்வபோது விடுமுறை எடுப்பார். அறுவை சிகிச்சை செய்த பிறகு மருந்து மாத்திரைகளை எடுத்து வந்ததாக தெரிகிறது. வகுப்பறையில் எங்கள் முன்னிலையில் சூர்யா இறந்தது வேதனை அளிக்கிறது என தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.