இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க், அதாவது ‘அடல் சேது’ பாலத்தில், பாதுகாப்புக் காரணங்களுக்காக இருசக்கர வாகனங்கள் மற்றும் முச்சக்கர வாகனங்கள் செல்வதற்கு ஆரம்பத்திலிருந்தே முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 100 கி.மீ வேகத்தில் கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்லும் இந்த அதிவேகப் பாதையில், பைக்குகள் சென்றால் பயங்கர காற்று மற்றும் வேகத்தின் காரணமாகப் பெரிய விபத்துகள் நிகழ வாய்ப்புள்ளது என்பதற்காகவே இந்தத் தடை அமலில் உள்ளது.

ஆனால், இந்த எந்தவிதமான பாதுகாப்பு விதிகளையும் துளியும் மதிக்காமல், இரண்டு இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் அடல் சேது பாலத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து அதிவேகமாகப் பயணித்த காட்சி தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் நிற்காமல், எதிரே அதிவேகத்தில் கார்கள் வந்துகொண்டிருந்த நிலையிலும், அந்த இளைஞர்கள் பாலத்தின் தவறான பாதையில் தங்களது பைக்கை அபாயகரமான முறையில் இயக்கிச் சென்றுள்ளனர். தங்களின் இந்த ஆபத்தானப் பயணத்தை அவர்களே மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் லைக்ஸ்களுக்காகவும் புகழுக்காகவும் பதிவேற்றியுள்ளனர்.

இந்த நெஞ்சை பதற வைக்கும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவியதைத் தொடர்ந்து, “இப்படிப்பட்ட பொறுப்பற்ற நபர்களால் சாலையில் செல்லும் மற்ற அப்பாவிகளின் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது” எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கொந்தளிப்படைந்துள்ளனர்.

இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மும்பை மற்றும் நவிமும்பை காவல்துறையினர் இந்த விவகாரத்தைக் தீவிரமாகக் கையில் எடுத்துள்ளனர். பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கண்காணிப்புக் கேமராக்களின் உதவியுடன், விதிமீறலில் ஈடுபட்ட அந்த நபர்களின் பைக் எண்ணை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்புத் தடைகளை மீறி பாலத்திற்குள் நுழைந்தது, தவறான பாதையில் வாகனம் ஓட்டியது மற்றும் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து விளைவித்தது போன்ற சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபர்களை விரைவாகக் கைது செய்யக் காவல் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

“>