உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் ரேபரேலியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், ரேபரேலி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்திக்கும், உத்தரப் பிரதேச அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங்குக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டத்தின் நடுவில் அமைச்சர் தினேஷ் பேச முயன்றபோது, ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்தார்.

தான் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவதாகவும், பேச விரும்பினால் முதலில் தனது அனுமதியைப் பெற வேண்டும் என்றும் ராகுல் காந்தி திட்டவட்டமாகக் கூறினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங், “மக்களவையில் சபாநாயகருக்கு நீங்கள் கீழ்ப்படிகிறீர்களா? இப்போது நான் ஏன் உங்களுக்கு கீழ்ப்படிய வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார். இந்த வாக்குவாதம் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.