தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய நெடுஞ்சாலையில், இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர், அந்தப் பெண்ணிடம் தவறான எண்ணத்துடன் அநாகரீகமாக நடந்துகொண்டதாகத் தெரிகிறது. இதனால் கடும் கோபமடைந்த அந்த இளம்பெண், பயந்து ஓடாமல் துணிச்சலுடன் அந்த வாலிபரை எதிர்த்துக் கேள்வி கேட்டுள்ளார். நிலைமை மோசமாவதை உணர்ந்து அங்கிருந்து தப்பியோட முயன்ற அந்த வாலிபரை, இளம்பெண் விடாமல் நடுரோட்டிலேயே ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார்.

அங்கிருந்த பொது மக்கள் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்த வாலிபரைக் கைகளால் தாக்கி கீழே தள்ளிப் புரட்டி எடுத்தார். அத்துடன் நிற்காமல், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அங்கேயே உடனடிப் பாடம் புகட்டும் வகையில், ஆத்திரத்துடன் தனது காலணியைக் கழற்றி அந்த வாலிபரை வெளுத்து வாங்கினார். நெடுஞ்சாலையில் அரங்கேறிய இந்த அதிரடிச் சம்பவத்தைக் கண்டு அங்கிருந்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் உறைந்து போயினர். பெண்களின் பாதுகாப்பிற்குத் துணிச்சலே முதல் ஆயுதம் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்த இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, அந்த இளம்பெண்ணின் தைரியத்திற்கு நெட்டிசன்களிடையே பலத்த பாராட்டுகளைப் பெற்று வருகிறது