நேபாள நாட்டில் காத்மாண்டு நகரில் இருந்து பொகாராவிற்கு சென்ற எட்டி  ஏர்லைன்ஸ் விமானம் தரை இறங்க முயற்சி செய்தபோது விமானத்தில் கோளாறு ஏற்பட்டு சேட்டி ஆற்றின் கரையின் மீது மோதி தீப்பிடித்தது. இந்த விபத்து நடைபெற்ற இடத்தில் உடனடியாக மீட்பு பணிகள் நடைபெற்றது. இதில் 70 பேர் பலியாகி உள்ளனர். மேலும் இரண்டு பேரின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எட்டி ஏர்லைன்ஸ் நிறுவன செய்தி தொடர்பாளர் சுதர்சன் பர்தவுலா கூறியதாவது, 70 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் 22 பேர் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது என கூறியுள்ளார்.

மீதமுள்ள 40 உடல்களில் 25 பேர் உடல்கள்  ஏற்கனவே ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக காத்மாண்டுக்கு  கொண்டுவரப்பட்டு அங்கிருந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 23 உடல்களும் காத்மாண்டிற்கு கொண்டு வரப்படுகிறது. இதற்கிடையே விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டு கருப்பு பெட்டிகளும் மீட்கப்பட்டுள்ளது. அந்த கருப்பு பெட்டிகள் இரண்டும் நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தான் விபத்தின் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது என்பது வெளிச்சத்திற்கு வரும் என கூறப்பட்டுள்ளது.