தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங்க் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் மொத்தம் 180 கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் செயல் இழந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முகவர்கள் உடனடியாக தொழில்நுட்ப பிரிவு அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்காணிப்பு கேமராக்களை சரி செய்தனர்.

இதைத்தொடர்ந்து 20 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் சிசிடிவி கேமரா காட்சிகள் டிவியில் தெரிய ஆரம்பித்தது. இந்நிலையில் வாக்குப்பதிவு வைக்கப்பட்ட அறையில் கேமராக்கள் செயலிழந்தது தொடர்பாக தற்போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா  விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தால் சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் நேற்று மாலை செயலிழந்தது. நேற்று மாலை சுமார் 6.17 முதல் 6:43 மணி வரை சுமார் 20 நிமிடங்களுக்கு சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை. ஆனால் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக இருக்கிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மேலும் சந்தேகம் இருந்தால் கட்சியினர் அழைத்து சென்று காட்ட தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.