கேதார்நாத் யாத்திரை என்றாலே பக்தி மட்டுமல்ல, அங்குள்ள பொருட்களின் விலையும் எப்போதும் பேசுபொருளாகும். அப்படி ஒரு வீடியோதான் இப்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ஒரு தண்ணீர் பாட்டிலின் விலை 80 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுவதைப் பார்த்த சுற்றுலாப் பயணி ஒருவர், “ஏன் இவ்வளவு விலை?” என்று கடைக்காரரிடம் எகிறுகிறார். ஆனால், அந்த கடைக்காரர் ஆவேசப்படாமல், மிக நிதானமாக ஒரு பதிலைக் கொடுத்துள்ளார்.

அந்தப் பதில் இப்போது இணையவாசிகளை யோசிக்க வைத்துள்ளது. ​”நீங்கள் சமவெளியில் 20 ரூபாய்க்கு வாங்கும் அதே பாட்டிலை, 14 கிலோமீட்டர் செங்குத்தான மலையில் முதுகிலும், கழுதைகள் மீதும் சுமந்து கொண்டு வருகிறோம். ஒரு பாட்டிலை மேலே கொண்டு வர பல மணிநேர உழைப்பும், கூலியும் செலவாகிறது” என்று அந்த கடைக்காரர் விளக்குகிறார்.

இதைக் கேட்ட பிறகு, முதலில் அந்த கடைக்காரரை விமர்சித்தவர்கள் இப்போது அவருக்கு ஆதரவாக மாறிவிட்டனர். “இது வெறும் லாபம் அல்ல, அவர்களின் உழைப்புக்கான ஊதியம்” என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மலையோர வாழ்க்கையின் வலியைப் புரிய வைத்துள்ள இந்த வீடியோ, மலைப் பிரதேசங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு ஒரு பெரிய பாடமாக அமைந்துள்ளது.