சென்னையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆவின் நிறுவனம் சார்பாக மாதாந்திர பால் அட்டை மூலமாக பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போலி மாதாந்திர பால் அட்டைகள்  அதிக அளவில் நடமாடுவதாக அதிகாரிகளுக்கு புகார் எழுந்ததையடுத்து அவற்றை அடையாளம் கண்டு அவற்றை நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன்காரணமாக ஆரஞ்சு நிற பால் பாக்கெட் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஆவின் மாதாந்திர பால் அட்டைகளை புதுப்பிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வாடிக்கையாளர்கள் குடும்ப அட்டை அல்லது வீட்டு வாடகை ஒப்பந்தம் போன்ற ஆவணங்களின் நகலை ஆவின் நிறுவனத்தில் கொடுத்த பிறகுதான் தங்களுடைய மாதாந்திர பால் அட்டையை புதுப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு குடும்ப அட்டைக்கு தினமும் ஒரு லிட்டர் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது.