நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை சேவையை இந்தியாவில் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு அறிதிறன் பேஸில் உள்ள சென்சார்களை பயன்படுத்தி நிலநடுக்கத்தினுடைய தன்மையை கண்டறிந்து மதிப்பிடுவதற்கான தகவல்கள் சேகரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய நில அதிர்வு மையத்துடனான ஆலோசனைக்கு பிறகு இந்தியாவில் ஆண்ட்ராய்டு நிலநடுக்க எச்சரிக்கை சேவை அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இந்திய ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் பகுதியில் நிலநடுக்கம் ஏற்படும் போது முன்னறிவிப்பு எச்சரிக்கை பெறுவார்கள். கூகுள் தேடுபொறி மற்றும் கூகுள் மேப் தளத்தில் வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரழிவுகளை பற்றிய பயனுள்ள பாதுகாப்பு தகவல்களை பயனர்களுக்கு வழங்குவதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தோடு நெருங்கி பணியாற்று வருவதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் தொடங்கும் போது மக்களுக்கு முன்னெச்சரிக்கை வழங்கும் சேவை பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.