நாளை காலை 10:30 மணிக்குள் ரூபாய் 2.40 கோடி ரூபாய் திருப்பி அளிக்காமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி தயாரித்திருக்கும் துருவ நட்சத்திரம் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தை வெளியிட இடைக்கால தடைவிதிக்கக்கோரி ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரராகவுள்ள விஜயராகவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்  மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் சிம்புவை நாயகனாக வைத்து சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்குவதற்காக கவுதம் வாசுதேவ் மேனன் தங்கள் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டதாகவும், அதற்கு முன்பணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் அளித்ததாகவும் கூறியுள்ளார்.

ஒப்பந்தப்படி அந்த பட வேலைகள் நடைபெறாத நிலையில், வாங்கிய  முன்பணத்தை இதுவரை கவுதம் வாசுதேவ் மேனன் திரும்ப அளிக்கவில்லை எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். எனவே தன்னிடம் பெற்ற தொகை திரும்ப அளிக்காமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி சி. சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி மற்றும் மணிகண்டன் ஆஜராகி துருவ நட்சத்திரம் படத்தின் விநியோக உரிமையை விற்றதன் மூலம் கௌதம் வாசுதேவ் மேனன் பணம் பெற்ற போதிலும் தங்களது பணத்தை திரும்ப அளிக்கவில்லை என கூறினர்.

கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி படத்தின் வெளியீட்டு தேதி 2 மாதத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் படத்திற்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும், பணத்தை திரும்பி அளிக்காமல் படத்தை வெளியிட மாட்டோம் எனவும் உறுதியளித்தார்.

இதனையடுத்து நாளை காலை 10:30 மணிக்குள் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என கௌம் வாசுதேவ் மேனனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்படி கொடுக்கவில்லை என்றால் துருவ நட்சத்திரம் படத்தை இந்தியா மற்றும் வெளிநாடு என எங்கும்வெளியிடக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.