தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜயை திரையுலகில் அறிமுகப்படுத்திய பெருமை அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகரும். நடிகர் விஜயின் மார்க்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் உயர்வதற்கு அவருடைய அப்பாவின் உழைப்பும் பின்னணியில் இருக்கிறது. ஆனால் கடந்த சில வருடங்களாகவே நடிகர் விஜய்யும் அவருடைய அப்பாவும் பேசிக் கொள்வதில்லை என தகவல்கள் வெளிவருகிறது. நடிகர் விஜய் பெயரில் தனியாக கட்சி ஆரம்பிக்க வேண்டும் என எஸ்ஏ சந்திரசேகர் முயற்சி செய்ததால் அவருடைய நடவடிக்கை பிடிக்காமல் தன்னுடைய அப்பாவிடம் இருந்து விஜய் ஒதுங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் எஸ்ஏ சந்திரசேகர் பேட்டி ஒன்றில் தனக்கும் தன்னுடைய மகனுக்கும் இருக்கும் பிரச்சினை குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, நான் செய்த ஒரே ஒரு தவறை விஜய்யை இன்னமும் குழந்தையாக நினைத்தது தான். நான் விஜயை குழந்தையாக நினைத்து ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லி சொல்லி செய்ய வைத்தது சில நேரங்களில் விஜய்க்கு பிடிக்காமல் போயிருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் இதற்கு முன்பாக நானும் விஜயும் ஒன்றாக சேர்ந்து தான் வாரிசு படத்தை பார்த்தோம் என்று எஸ்ஏ சந்திரசேகர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.