சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டை அம்மணி அம்மன் தோட்டம் தெருவில் கலைச்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் கலைச்செல்வம் தனது ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்தார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஆட்டோவும் மோட்டார் சைக்கிளும் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கலைச்செல்வம் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் வாகனங்களில் பற்றி எரிந்த தீயை அணைத்தார்.

ஆனால் இந்த தீ விபத்தில் ஆட்டோவும் மோட்டார் சைக்கிளும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்கள் யாராவது வேண்டும் என்றே ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து விட்டு சென்றார்களா என்பது குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.