திருச்சி மாவட்டத்தில் உள்ள சங்கிலியாண்டபுரம் அண்ணா நகரில் சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சார்லஸின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நண்பர்களான முகமது ரியாஸ், மணிகண்டன், பாண்டி உள்ளிட்ட 4 பேரும் மணல்வாரி துறை டாஸ்மாக் கடை அருகே நடுரோட்டில் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் ராஜபாண்டி, ஊர் காவல் படை வீரர் தினேஷ் ஆகியோர் பிறந்த நாளை நடுரோட்டில் வைத்து கொண்டாடிய வாலிபர்களை கண்டித்தனர்.

இதனால் கோபமடைந்த சார்லஸ் உள்ளிட்ட 4 பேரும் ராஜபாண்டிடை தகாத வார்த்தைகளால் திட்டி தள்ளிவிட்டனர். இதனால் காயமடைந்த ராஜபாண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சார்லஸ், முகமது ரியாஸ், மணிகண்டன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள், கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பிய பாண்டியை தீவிரமாக தேடி வருகின்றனர்.