பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் பாதுகாப்பு வாகனக் குழு மும்பையின் ஜுஹு பகுதியில் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்‌ஷய் குமார் மற்றும் அவரது மனைவி ட்விங்கிள் கண்ணா விமான நிலையத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்களது பாதுகாப்புப் படையில் இருந்த இன்னோவா கார் மீது பின்னால் வந்த மெர்சிடிஸ் கார் மோதியது.

இந்த மோதலின் தாக்கத்தால், அந்த இன்னோவா கார் முன்னால் சென்ற ஆட்டோ ரிக்‌ஷா மீது பலமாக மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் முகமது அமீர் மற்றும் அதில் பயணம் செய்த பயணி ஒருவரும் படுகாயமடைந்தனர். அக்‌ஷய் குமார் மற்றொரு காரில் இருந்ததால் அவர் காயமின்றி உயிர் தப்பினார்.

“>

இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட ஓட்டுநரின் சகோதரர் முகமது சமீர், தனது சகோதரருக்குச் சிறந்த சிகிச்சை அளிக்கவும், சேதமடைந்த ஆட்டோவிற்கு உரிய இழப்பீடு வழங்கவும் நடிகர் அக்‌ஷய் குமார் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் “நாங்கள் ஏழைகள், என் சகோதரருக்குத் தேவையான மருந்துகளும் முறையான சிகிச்சையும் கிடைத்தால் போதும்” என்று அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து மும்பை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அக்‌ஷய் குமார் தரப்பிலிருந்து இதுவரை இது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.