ஒடிசா மாநிலம் ஓரலி கிராமத்தில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்த மாணவன் ருத்ர நாராயணன் சேத்தி. சம்பவத்தன்று ருத்ர நாராயணன் தனது நான்கு நண்பர்களுடன் பள்ளிக்கூட வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். இதனைப் பார்த்த ஆசிரியர் வகுப்பு நேரத்தில் விளையாடிய குற்றத்திற்காக மாணவர்களை தோப்புக்கரணம் போடும்படி கூறியுள்ளார்.

அப்போது தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்த ருத்ர நாராயணன் திடீரென மயங்கி விட இதுகுறித்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் பள்ளிக்கு விரைந்து வந்த பெற்றோர் சிறுவன் ருத்ர நாராயணன் சேத்தியை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக கட்டாக்கில் அமைந்துள்ள எஸ்சிபி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் உயிர் இழந்தான். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.