தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ்கள் பெற விண்ணப்பிக்குமாறு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அரசாணையின்படி, எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று எம்.டி.சி, என்.ஏ.சி பெற்றவர்கள் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்கள் பத்தாம் வகுப்புக்கு இணையான சான்றிதழும், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற என்.டி.சி, என்.ஏ.சி பெற்றவர்கள் 11-ம் மற்றும் 12-ஆம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12 -ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும் என ஆணையிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அரசு தேர்வுகள் இயக்கத்தால் கடந்த 2022 ஆகஸ்டில் நடைபெற்ற மொழி தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் 12 -ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் கூறியதாவது, இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல்கள் போன்றவை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பின்பற்றி விண்ணப்பதாரரின் மாவட்டத்தில் உள்ள கீழ்காணும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ  விண்ணப்பத்தை வருகிற 28.2.2023 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்.