திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அறிவு திருக்கோவில் பகுதியில் அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ரசாயன தொழிற்சாலை நடத்தி வருகிறார். அந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் தொழிற்சாலையும், மேல் தளத்தில் மூன்று வீடுகளும் அமைந்துள்ளது. நேற்று மாலை அபுதாகிர், நாகலட்சுமி ஆகிய ஊழியர்கள் தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மின் கசிவு காரணமாக மோட்டாரில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் ரசாயனம் வைக்கப்பட்டிருந்த பெரல்கள் வரை தீ வேகமாக பரவியது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையே வீட்டின் மேல் தளத்தில் குடியிருந்தவர்களும் பதற்றத்தில் வீடுகளை விட்டு வெளியேறினார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் தொழிற்சாலையும், மூன்று வீடுகளும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.