திருச்சி மாவட்டத்தில் உள்ள கருமண்டபம் குறிஞ்சி தெருவில் சிவக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் சிவகுமார் அரசு உரிமம் பெற்று ஏர்கண் எனப்படும் இரட்டைக் குழல் துப்பாக்கி வைத்துள்ளார். நேற்று முன்தினம் சிவக்குமார் ஒரு தெருநாயை துப்பாக்கியால் சுட்டதாகவும், அந்த நாய் காலில் காயத்துடன் தப்பி சென்றதாகவும் தெரிகிறது.

இதுகுறித்து சுப்பிரமணியன் என்பவர் அவசர எண் 100-ஐ தொடர்பு கொண்டு புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் ஏற்கனவே சிவக்குமார் இரண்டு நாய்களை சுட்டு கொன்றது தெரியவந்தது. இதனால் சிவகுமாரை போலீசார் கைது செய்தனர்.