பஞ்சாப் மாநிலத்தின் பர்னாலா மாவட்டத்தில் கர்வா சௌத் பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட துயரச் சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 10, வெள்ளிக்கிழமை நடைபெற்ற கர்வா சௌத் விழாவில் 59 வயதான ஆஷா ராணி என்ற பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த நிகழ்வு நிகழ்ந்த தருணம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.

அதாவது  பண்டிகை நிகழ்வின் போது ஆஷா ராணி தனது தோழிகளுடன் பஞ்சாபி பாடல்களுக்கு நடனமாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

 

 

அந்த வீடியோவில் மஞ்சள் நிற சேலை அணிந்திருந்த ராணி மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருப்பதும், திடீரென மயங்கி விழுவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதனால் அங்கு இருந்த பெண்கள் பீதி அடைந்தனர்.

ஆஷா ராணி தனது கணவர் தர்செம் லால் மற்றும் பேத்தியுடன் அருகிலுள்ள வீட்டில் நடந்த கர்வா சௌத் கொண்டாட்டத்திற்குச் சென்றிருந்தார். சந்திரன் தென்படாததால், பெண்கள் தொடர்ந்து பாடல்களுக்கு இணைந்து நடனமாடினர். அதன்போது ராணி மயங்கி விழுந்து உயிரிழந்தார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.