திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது லட்டு பிரசாதம் தான். திருப்பதியில் மொட்டை அடித்து விட்டு லட்டு வாங்கி வந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். அதிலும் லட்டு தயாரிக்க பயன்படுத்தும் பதார்த்தங்களால் அதனுடைய சுவை இன்னும் அதிகமாக காணப்படும். வேறு எங்கும் இது போன்று தயாரிப்பது மிக கடினம். இதனால் இதனுடைய மவுசு அதிகம்.

இந்நிலையில் திருப்பதி லட்டு பிரசாதத்தின் சுவையும், தரமும் குறைவதற்கான வாய்ப்பே கிடையாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி லட்டு குறித்து புகார் எழுந்த நிலையில் விளக்கம் அளித்துள்ள தேவஸ்தானம், திருப்பதி லட்டு தயாரிக்க தரமான முந்திரி, நெய், திராட்சை, கடலைமாவு பயன்படுத்தப்படுகிறது. ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்படும் ஒரு ஃபார்முலாவின் அடிப்படையில் மட்டுமே தொடர்ந்து லட்டு தயாரிக்கப்படுகிறது. அதனால் திருப்பதி லட்டின் சுவையும், தரமும் குறைவதற்கான வாய்ப்பு கிடையாது என விளக்கம் அளித்துள்ளது.