இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே ரசிகர்களின் செல்லப்பிள்ளையுமான எம்.எஸ்.தோனி எப்போதுமே தனது தனிப்பட்ட விஷயங்களை ரகசியமாக வைத்திருப்பவர்.

ஆனால், சமீபத்தில் ரசிகர் ஒருவருடன் அவர் எடுத்த செல்பியால், அவரது மொபைல் போன் வால்பேப்பர் குறித்த சுவாரசியமான தகவல் கசிந்துள்ளது. அந்தப் புகைப்படத்தில் தோனி கையில் வைத்திருக்கும் மொபைல் ஸ்கிரீன் எதேச்சையாக ஒளிர, அதில் இந்திய ராணுவத்தின் ‘பாரா ஸ்பெஷல் ஃபோர்ஸ்’ (Para Special Forces) அமைப்பின் ‘பலிதான்’ (Balidaan) முத்திரை இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

இந்திய தேசியக் கொடியின் பின்னணியில், “வீரம்… தகுதி… போர்… தியாகமே முதன்மையான தர்மம்” என்ற சமஸ்கிருத வாசகங்களுடன் அந்த வால்பேப்பர் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய ராணுவத்தின் கௌரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கும் தோனி, ராணுவத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாகவே தனது மொபைலிலும் இந்தச் சின்னத்தை வைத்துள்ளார்.

2019 உலகக்கோப்பைக்கு பிறகு காஷ்மீரில் ராணுவப் பணியில் ஈடுபட்டது முதல், தனது விக்கெட் கீப்பிங் கிளவுஸில் இந்தச் சின்னத்தைப் பயன்படுத்தியது வரை தோனியின் ராணுவக் காதல் உலகறிந்ததே.

தற்போது அவரது மொபைல் வால்பேப்பரும் ராணுவ மயமாக இருப்பது தோனி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த வால்பேப்பர் புகைப்படம் இப்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.