பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜன,.11) அஜித் நடித்த “துணிவு”, விஜய் நடித்த வாரிசு ஆகிய திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இதற்கென சென்ற 2 நாட்களாக தமிழகம் முழுவதும் ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் படம் ரிலீஸ் ஆன பின் 2 ரசிகர் மன்றத்தினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு, அதனால் சினிமா தியேட்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அந்த வகையில் தியேட்டர் வளாகத்திலும், பொது இடங்களிலும் மேளம் அடித்துக் கொண்டு ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்யக்கூடாது. படம் பார்க்க வரும்போது மக்களுக்கு தொல்லை கொடுக்கக்கூடாது. சினிமா தியேட்டருக்குள் வரக்கூடிய ரசிகர்கள் எளிதில் தீப்பற்றக்கக்கூடிய பொருட்களை எதையும் எடுத்து வரக்கூடாது. அத்துடன் குடி போதையில் தியேட்டருக்கு வரக்கூடாது.

மேடையின் மேல் ஏறி ஆட்டம் போடக் கூடாது. தியேட்டரில் பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டால் அவற்றிற்கு ரசிகர் மன்றங்களே பொறுப்பேற்கவும். மேலும் அதற்குரிய இழப்பீடு தர வேண்டும். ரசிகர்மன்ற காட்சிகள் திரையிடும் போது ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களுக்கு சம்பந்தப்பட்ட ரசிகர் மன்றங்களே பொறுப்பேற்க வேண்டும். ரசிகர்களை ஒழுங்குபடுத்த போதுமான தன்னார்வலர்களை ரசிகர் மன்றத்தினர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் நியமிக்கவேண்டும் என காவல்துறை தரப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.