தமிழ்நாடு தொடர்ந்து அமைதி பூங்காவக திகழவும், குற்ற நிகழ்வுகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.  

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழவும் தொழில் வளம் மிகுந்த மாநிலமாக மேலும் வளர்ச்சி பெறவும் குற்ற நிகழ்வுகளை தடுத்திடவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வுக் கூட்டத்தில் உரை.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று 26/9/2023 தலைமைச் செயலகத்தில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பேசியதாவது,

அனைவருக்கும் வணக்கம், இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநிலம் முழுவதும் நிகழ்ந்த பல்வேறு வகையான சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்பாக கடந்த ஆண்டு ஏற்பட்ட நிகழ்வுகளோடு ஒப்பிட்டுக் கூறி இருக்கிறீர்கள்.
தமிழ்நாட்டில் அடுத்த ஏழு எட்டு மாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த காலகட்டத்தில் சில முக்கியமான நினைவு நாட்கள் மற்றும் மதரீதியான திருவிழாக்கள் நடைபெற உள்ளன.

அதேபோல் அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த காலகட்டத்தில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாகாமல் மிக மிக கவனமாக கண்காணிக்க வேண்டும். இதற்காக காவல்துறையில் உள்ள ஆளிநர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாக கவனித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர்கள் கிடைக்கப்பெறும் தகவல்களை நன்கு ஆராய்ந்து பகுப்பாய்வு செய்து உடனுக்குடன் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அது மட்டுமல்ல, நுண்ணறிவு பிரிவு அலுவலர்களும் விழிப்புடன் இருந்து தகவல்களை உடனுக்குடன் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு அலுவலர்களுக்கு வழங்கி எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படா வண்ணம் ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருக்க வேண்டும்.

அதேபோல் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்களுடனும் ஒருங்கிணைந்து பணியாற்றினால் காவல்துறையின் பணி திறன் பன்மடங்கு மேம்படும்.

கடந்த ஒரு மாத காலமாக சில பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் தமிழ்நாட்டில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பதை போன்ற தோற்றத்தை உருவாக்கி வருகின்றன. புள்ளி விவரங்களை ஆய்வு செய்து பார்த்தால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

ஆனால் சில ஊடகங்களில் இது போன்ற செய்திகள் சித்தரிக்கப்படுவதால் மக்களிடையே மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த தவறான கருத்து ஏற்படக்கூடும். இதனைத் தவிர்க்க காவல்துறையின் மாவட்ட அலுவலர்கள் ஊடகங்களுடன் சரியான தகவல்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்வதுடன் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். அதனையும் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தி வர வேண்டும்.

இது தவிர முக்கிய நிகழ்வுகளில் சரியான தகவல்களை பத்திரிகைகள் வாயிலாக மக்கள் அறியும் வண்ணம் ஊடகங்களில் அவ்வப்போது பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் காவல்துறை இயக்குனர் தெரியப்படுத்துவதும் நல்ல பலனை அளிக்கும்.

நமது அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு சிறப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே அவர்களின் கல்வி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.

ஆகையால் பள்ளி கல்லூரிகள் மற்றும் பெண்கள் அதிகம் கூடும் இதர இடங்களில் சிறப்பு ரோந்து படைகள் மூலம் கண்காணித்து தவறு செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும், அடிக்கடி குற்றம் நிகழும் இடங்களின் புள்ளி விவரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தும் அறிவியல் பூர்வமாக காவல்துறை செயல்பட வேண்டும்.

அடுத்து நான் மிக முக்கியமாக குறிப்பிட விரும்புவது பாலியல் ரீதியாக குழந்தைகளை துன்புறுத்துபவர்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும். இத்தகைய குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்று தருவதை உறுதி செய்ய வேண்டும்.

போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புகார் அளிக்க வரும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தனி அக்கறையுடனும், கண்ணியத்துடனும் நடத்தப்பட்டு அவர்களுடைய குழந்தையின் பெயர் அடையாளம் ஆகியவை காக்கப்பட வேண்டும்.

போக்சோ சட்டம் குறித்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் சென்று குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாக்கும் சட்டங்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதை பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகளை பற்றியும் அதேபோல் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பவர்கள் பற்றிய தகவல்களை காவல்துறைக்கு தெரியப்படுத்த அவசரகால உதவி எண்கள்/ வாட்ஸ் அப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கடந்த நான்கு ஐந்து மாதங்களாக கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனையை தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து மேற்கொண்டதால் கள்ளச்சாராய விற்பனை குறைந்துள்ளது என்று அறிகிறேன். இந்த நடவடிக்கையை தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

மலைப்பகுதிகள் மற்றும் எல்லை மாவட்டங்களை தீவிரமாக கண்காணித்து கஞ்சா பயிரிடுதல் மற்றும் போதை பொருட்கள் கடத்தலை தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

சட்டம் -ஒழுங்கு பிரச்சனை சில சமயங்களில் சில சமூக ஊடக செய்திகளால் ஏற்பட்டு விடுகிறது. ஆகவே சமூக ஊடகப் பதிவுகளை தீவிரமாக கண்காணித்து அவற்றில் ஜாதி மத ரீதியான வன்மங்களை பரப்பும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல் ஆளிநர்கள் முதல் காவல் துறை உயர் அதிகாரிகள் வரை ஒவ்வொருவரும் கடமை மற்றும் பொறுப்புணர்ச்சியுடன் அவர்களின் பணியில் ஈடுபட்டு சரியான நுண்ணறிவு தகவல்களைப் பெற்று எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படா வண்ணம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

காவல்துறை சிறப்பாக செயல்பட குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதோடு குற்றவாளிகளை கைது செய்து விரைவில் நீதி பெற்று தருவதிலும் பெரும் கவனம் செலுத்த வேண்டும்.

இறுதியாக நமது மாநிலம் தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழவும், தொழில் வளம் மிகுந்த மாநிலமாக மேலும் வளர்ச்சி பெற குற்ற நிகழ்வுகளை பெரிதும் குறைத்திடவும், தடுத்திடவும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டு என் உரையை நிறைவு செய்கிறேன். நன்றி, வணக்கம்.

இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் திரு. சிவ்தாஸ் மீனா, உள்துறை முதன்மைச் செயலாளர் திருமதி பெ. அமுதா காவல்துறை தலைமை இயக்குனர் திரு. சங்கர் ஜி வால், சென்னை பெருநகர காவல் ஆணையர் தெரு சந்தீப் ராய் ரத்தோட், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் முனைவர் அ. அமல்ராஜ், ஆவடி மாநகர காவல் ஆணையர் திரு. கி. சங்கர், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.