சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தென்கிழக்கு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ள நிலையில் இன்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுவடைந்து இலங்கை கடல் பகுதிகளை சென்றடைய கூடும். இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழக கடலோர மாவட்டங்கள், தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

அதன் பிறகு பிப்ரவரி 1-ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு காரைக்கால், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் ஓரிரு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று பிப்ரவரி 2-ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும். மேலும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் போன்ற பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீச கூடும் என்பதால் ஜனவரி 30, 31, பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.