தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக இந்த மாதம் செய்முறை தேர்வுகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அகமதிப்பீடு மதிப்பெண்களை இணையதளம் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge1.tn.gov.in  என்ற அரசு தேர்வுகள் இயக்க இணையதளத்திற்கு சென்று யூசர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி அகமதிப்பீட்டு மதிப்பெண்களை பதிவு செய்யலாம்.

இதற்கான கால அவகாசம் பிப்ரவரி 17 முதல் 28ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை தலைமை ஆசிரியர்கள் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை இணையதளம் மூலமாக பதிவேற்றம் செய்து மார்ச் இரண்டாம் தேதிக்குள் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர்கள் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.