பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று (சனிக்கிழமை) தமிழகம் வருகிறார். மாலத்தீவிலிருந்து தனி விமானத்தில் இன்று இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தருகிறார்.

விமான நிலையத்தில் தமிழக ஆளுநர், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பிரதமருக்கு வரவேற்பளிக்கின்றனர். தொடர்ந்து, ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி நேரில் வந்து திறந்து வைக்க உள்ளார். இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளதை முன்னிட்டு, திமுக சார்பில் கீழடி குறித்த ஒரு வீடியோவை வெளியிடப்பட்டுள்ளது. “நான் கீழடியில் வாழ்ந்த தமிழன் பேசுகிறேன்” என்ற வரிகளால் தொடங்கும் இந்த வீடியோவில், தமிழர் தொன்மை மற்றும் நாகரிக வளர்ச்சி குறித்து பெருமிதமாக கூறப்பட்டுள்ளது. ஹரப்பா, மொகஞ்சதாரோவுக்கு இணையாக தமிழ்நாட்டில் கீழடி நகர நாகரிகம் இருந்ததை உலகிற்கு அறிமுகம் செய்தது இவ்வகழ்வாய்வு என கூறப்படுகிறது.

“>

 

மேலும், தமிழில் எழுத்து கி.மு. 300ல் தோன்றியது என கருதப்பட்ட நிலையில், கீழடி அகழ்வாய்வு மூலம் கி.மு. 600 என நிரூபிக்கப்பட்டதையும் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய வரலாறு தெற்கிலிருந்து தொடங்கியதை தெளிவாக காட்டும் கீழடி, இன்று உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பன்னாட்டு ஆய்வகங்களும் கீழடியை உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்றாக அங்கீகரித்துள்ளன. “கீழடி வரலாறு வெல்லும், தமிழர் வரலாற்றை உலகமே சொல்லும்” என வீடியோ முடிவடைகிறது.