கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் வினிஷா (24). இவர் சென்னையில் உள்ள தி.நகரில் கடந்த ஒரு வருடமாக தங்கி ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் செல்வமணி (29)என்ற வாலிபரை காதலித்து வந்ததோடு அவருடன் திருமணம் செய்யாமலேயே நெருங்கி பழகியுள்ளார். இவர் மதுரையைச் சேர்ந்தவர். இவர் சென்னையில் தங்கி ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வினிஷா கர்ப்பமாகவே தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் நேற்று வினிஷாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

அப்போது அவர் தான் ஒரு செவிலியர் என்பதால் தனக்குத்தானே பிரசவம் பார்க்க முடிவு செய்துள்ளார். அவர் குளியலறைக்கு சென்று அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்ததை விட பிரசவம் கடினமாகவே குழந்தையின் கால்களை பிடித்து வெளியே இழுத்துள்ளார். இதில் குழந்தையின் கால்கள் பிய்ந்து தனியாக வந்தது. இதனால் குழந்தை உயிரிழந்து பிறந்தது. இதனையடுத்து கழிவறையில் கால்களை வீசிவிட்டு குழந்தையின் உடலை எடுத்துக்கொண்டு வினிஷா மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு குழந்தையின் சடலத்தை பத்திரப்படுத்தினர்‌. இதைத்தொடர்ந்து வினிஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.