செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒட்டியம்பாக்கம் பகுதியில் விமல்ராஜ் (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொன்மாரில் உள்ள ஒரு தேவாலயத்தில் மத போதகராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த வைசாலி (33) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் அவர்களுக்கு 11 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் விமல்ராஜுக்கு தன் மனைவியின்  நடத்தையில் சந்தேகம் இருந்துள்ளது.

இதனால் அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதற்கிடையில் நேற்று முன்தினம் தன் மனைவியை அடித்து உதைத்து அவர் துன்புறுத்தியதோடு அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் தன் மனைவி மூச்சு திணறி இறந்து விட்டதாக அவர் உறவினர்களிடம் நாடகமாடியுள்ளார். இதற்கிடையில் வைசாலியின் உறவினர்கள் மும்பையில் இருந்து வருவதற்கு தாமதமானதால் அவரை அடக்கம் செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து மும்பையில் இருந்து அவர்கள் வந்த நிலையில் வைசாலியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் படி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வைசாலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தன் மனைவியை கொலை செய்ததை விமல் ராஜ் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.