சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி செக்காலை பகுதியில் 9 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி தனது கையில் அணிந்திருந்த தங்க மோதிரத்தை விழுங்கி விட்டார். இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு அவதிப்பட்ட சிறுமியை பெற்றோர் காரைக்குடியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்ததில் சிறுமியின் வயிற்றில் மோதிரம் சிக்கியிருப்பது தெரியவந்தது.

இதனால் லேசான மயக்க மருந்தை கொடுத்து அறுவை சிகிச்சை இல்லாமல் எண்டோஸ்கோபிக் முறையில் சிறுமியின் வயிற்றில் இருந்த தங்க மோதிரத்தை டாக்டர்கள் வெளியே எடுத்தனர். இதனையடுத்து சிறுமியை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். முழு பரிசோதனைக்கு பின்னர் சிறுமி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறப்பாக செயல்பட்ட மருத்துவமனை டாக்டர்கள் சதீஷ், கலா ராணி மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு சிறுமியின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.