தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் தக்வா பள்ளிவாசல் தெருவில் செய்யது அலி(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏஜென்ட் மூலமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் இருக்கும் ஹோட்டலுக்கு தொழிலாளியாக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு வேலை பார்த்து 4 மாதங்கள் மட்டும் செய்யது அலி தனது மனைவி பாத்திமாவுக்கு சம்பள பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் வாட்ஸ் அப் மூலம் தனது மனைவியை தொடர்பு கொண்ட செய்யது அலி கடும் பணி சுமை மற்றும் கெடுபுடியில் சிக்கி தவிப்பதாக தெரிவித்தார். மேலும் தன்னை சித்திரவதை செய்வதாகவும் கூறி இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பாத்திமா தனது கணவரை மீட்டு தர கோரி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.