சமூக வலைதளங்களில் எப்போது எந்த வீடியோ வைரலாகும் என்றே சொல்ல முடியாது. அந்த வகையில், கடந்த 2014-ம் ஆண்டு இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஒரு சுவாரசியமான மோதல் தொடர்பான வீடியோ தற்போது எக்ஸ் (X) தளத்தில் மீண்டும் தீயாய் பரவி வருகிறது. இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா, ஜெரோம் டெய்லர் வீசிய பந்தை மிட்-விக்கெட் திசையில் பவுண்டரிக்கு விரட்டினார். அந்தப் பந்து எல்லையைத் தொடும் முன்பே, மைதானத்தில் இருந்த ஒரு பால் பாய் (Ball Boy) திடீரென உள்ளே புகுந்து பந்தைப் பிடித்து ஃபீல்டர் ஆண்ட்ரே ரஸலிடம் கொடுத்தார். இதைப் பார்த்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டுவைன் பிராவோ செம கடுப்பாகி நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

​இந்த விசித்திரமான சம்பவத்தால் மைதானமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது. பந்து பவுண்டரி கோட்டைத் தொடவில்லை என்பதால், ஐசிசி-யின் 19.2.4 விதியின்படி நடுவர்கள் இதற்கு பவுண்டரி கொடுக்க மறுத்துவிட்டனர். பேட்ஸ்மேன்கள் ஓடி எடுத்த 2 ரன்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது. அந்தச் சிறுவன் செய்த இந்தச் செயல் அப்போது பெரிய விவாதத்தைக் கிளப்பியது. “ஒருவேளை அவன் பந்தைத் தொடாமல் இருந்திருந்தால் அது பவுண்டரி போயிருக்குமா?” என்ற கேள்வி இப்போதும் ரசிகர்களிடையே ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. சுமார் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த வீடியோ வைரலாகி கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.