சேலம் மாவட்டத்தில் உள்ள நங்கவள்ளி பாசக்குட்டையை சேர்ந்த கூலி தொழிலாளியான  சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரூபிணி. இந்த தம்பதிக்கு கவியரசி, பிரபா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் கவியரசி அரசு பெண்கள் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பெற்றோர் வேலைக்குச் சென்ற பிறகு சிறுமிகள் இருவரும் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர். இதனையடுத்து கவியரசி திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சகோதரிகளிடையே டி.வி. பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் கவியரசி டி.வி. ரிமோட்டை உடைத்ததாகவும், பின்னர் பெற்றோருக்கு பயந்து வீட்டின் கதவை தாழிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.