நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் சன்னதி தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகினி என்ற மனைவி உள்ளார். இதே போல திருமருகல் ஆண்டித்தோப்பு பகுதியில் கூலி வேலை பார்க்கும் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராகினி தனது குழந்தைகளுடன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சுரேஷ், அவரது நண்பர்களான கலையரசன், கீர்த்தி வாசன் ஆகியோர் நீங்கள் டியூஷன் எடுக்கிறீர்களா என கேட்டுள்ளனர்.

அதற்கு ராகினி நான் டியூஷன் எதுவும் எடுக்கவில்லை என கூறியுள்ளார். சிறிது நேரத்தில் சுரேஷும், அவரது நண்பர்களும் ராகினியின் தலைமுடியை பிடித்து கீழே இழுத்து தள்ளி பலமாக தாக்கியுள்ளனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ராகினி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சுரேஷ், கீர்த்திவாசன், கலையரசன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.