டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில், டிக்கெட் கவுண்டரில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் பெண் பயணியிடம் பண மோசடி செய்ய முயன்ற வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பீகாரைச் சேர்ந்த ஒரு பெண் தொழிலாளி டிக்கெட் வாங்குவதற்காக 1000 ரூபாய் கொடுத்துள்ளார்.

ஆனால், அந்த ஊழியர் டிக்கெட்டும் கொடுக்காமல், 200 ரூபாயை எடுத்துக் கொண்டு மீதி 800 ரூபாயை மட்டும் திருப்பிக் கொடுத்து ஏமாற்றியுள்ளார். தான் ஒரு ஏழைத் தொழிலாளி என்பதால் தன்னை எளிதாக ஏமாற்றப் பார்ப்பதாக அந்தப் பெண் வீடியோவில் கண்ணீருடன் குற்றம் சாட்டியது பார்ப்போரை கலங்கச் செய்தது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, வடக்கு ரயில்வே நிர்வாகம் உடனடியாகச் செயல்பட்டது. டெல்லி ரயில்வே கோட்ட மேலாளர், புகாருக்குள்ளான அந்த டிக்கெட் முன்பதிவு ஊழியரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

“>

 

மேலும், அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் இந்த வேகமான நடவடிக்கையை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வரும் அதே வேளையில், சாமானிய மக்களிடம் இது போன்ற மோசடிகள் நடப்பதைத் தடுக்க கடும் கண்காணிப்பு அவசியம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.