டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2A முதன்மைத் தேர்வுகளுக்கான முடிவுகளை விரைவாக வெளியிட்டு,  பணி ஆணைகளை வழங்கவேண்டுமென்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடைபெற்ற குரூப் 2/2A முதன்மைத் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்றுவரை வெளியிடப்படவில்லை. பல்வேறு நிர்வாக குளறுபடிகளுக்கு இடையே தேர்வு நடைபெற்ற நிலையில் , தேர்வு முடிவுகளும் வெளியிடபடாமல் இருப்பது தேர்வர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது,

செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வு முடிவுகளே 2 மாதங்களில் வெளியாகிவிட்ட நிலையில், மாநில தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு முடிவுகள் 10 மாதங்களாக வெளிவராமல் இருக்கின்றது. சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சரோ “இன்று வந்துவிடும்- நாளை வந்துவிடும்” என்று சொல்லி மாதங்களும் கடந்தோடுகிறதே தவிர முடிவுகளை வெளியிட எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காத இந்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டணங்கள்.

ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகளில் 5.50லட்சம் அரசுப்பணிகள் வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் அறிக்கையின் வாக்குறுதி எண் 187ன் படி தற்போது வரை 2.5லட்சம் பணிகளுக்கான ஆணைகளை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், மெத்தனப் போக்கின் மொத்த உருவமாக இருக்கும் இந்த செயலற்ற விடியா அரசு, மற்ற வாக்குறுதிகளை போலவே இதையும் காற்றில் பறக்க விட்டுவிட்டது.

அமைப்பு குளறுபடிகளைக் களைவதற்கு, இந்த விடியா திமுக அரசு உடனடியாக டிஎன்பிஎஸ்சி அமைப்பிற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து, நிலுவையில் உள்ள தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட்டு, தேர்வானவர்களுக்கான பணி ஆணைகளை வழங்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் காலி அரசு பணியிடங்களை நிரப்ப , முறையான தேர்வு கால அட்டவணைகளை வெளியிட்டு, அதனை சீரான முறையில் ஒழுங்குடன் பின்பற்றி உடனடியாக தேர்வுகளை நடத்திட வேண்டுமென இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.