தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு தராத சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, யோகி பாபு உள்ளிட்ட 5 நடிகர்களின் படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்போவது இல்லை என திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக அவர்களுக்கு ரெட் கார்டு வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பளம் பெற்றும் கால்ஷீட் தராதது, தயாரிப்பாளர்களுக்கு இழப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட காரணங்களால் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் சில நடிகர்களுக்கு நடிகர் சங்கத்திடம் விளக்கம் கேட்டு கூறுமாறு தெரிவித்திருக்கின்றனர். நடிகர் சங்கம் கொடுக்கும் பதிலை வைத்து அடுத்தக் கட்ட முடிவை எடுக்கவும் அவர்கள் திட்டமிட்டு இருக்கின்றனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் பல்வேறு புதிய முடிவுகளை எடுத்துள்ளனர்.