கர்நாடகாவின் பிதார் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வேகமாக வந்த பைக் ஒன்று டிராக்டர்-டிராலியுடன் மோதி நிகழ்ந்த பயங்கர விபத்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த காட்சி அப்பகுதியில் நிறுவப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகி, அதிர்ச்சிகரமான வீடியோவாக ஆன்லைனில் வெளியாகியுள்ளது. அதாவது கானன்பூர் நகரில் உள்ள ஒரு சந்திப்பில், டிராக்டர்-டிராலி ஒன்று திருப்பத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் வேகமாக வந்த பைக் நேராக அதன் மீது  மோதியது. மோதலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால், பைக் ஓட்டுநரும் பின்னால் இருந்த பயணியும் சில மீட்டர் தூரம் காற்றில் பறந்தனர்.

 

சிசிடிவி காட்சிகளில், பின்னால் அமர்ந்திருந்த நபர் சுமார் 20 அடி உயரம் வரை தூக்கி வீசப்பட்டு, சாலையில் விழுவது தெளிவாகக் காணப்படுகிறது. பைக் ஓட்டுநர் கடைசிநேரத்தில் விபத்தைத் தவிர்க்க முயன்றிருந்தாலும், அதிவேகமான காரணத்தால் கட்டுப்பாட்டை இழந்தார். விபத்துக்குப் பிறகு, பைக் முழுமையாக சேதமடைந்தது. இருவரும் ஹெல்மெட் அணியாத நிலையில் இருந்தது காட்சிகளில் தெரிகிறது. தற்போது இருவரின் உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

மேலும் இந்த வீடியோ இணையத்தில்  வைரலாகியுள்ள நிலையில், நெட்டிசன்கள் பைக் ஓட்டுநரின் அலட்சியத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், கானன்பூர் காவல் துறை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, விபத்தின் காரணம் மற்றும் காயமடைந்தவர்களின் நிலையை விசாரித்து வருகிறது.