கூட்டுக்குடும்பங்களில் நடக்கும் குடும்ப வன்முறையின் கோர முகத்தை வெளிச்சம்போட்டுக் காட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், இளம் பெண் ஒருவருக்கும் அவரது மாமனார் மற்றும் மாமியாருக்கும் இடையே வீட்டில் கடுமையான வாக்குவாதம் நடக்கிறது. வீட்டில் உள்ள உணவை அந்தப் பெண் சாப்பிடுவதற்கு மாமியாரும் மாமனாரும் தடை விதிப்பதாகவும், தனது கணவனைத் தனக்கு எதிராகத் தொடர்ந்து மூளைச்சலவை செய்து வருவதாகவும் அந்த மருமகள் குற்றம் சாட்டுகிறார்.

இந்த வாக்குவாதம் திடீரென வன்முறையாக மாற, ஆத்திரமடைந்த மாமியார் கெட்ட வார்த்தைகளால் திட்டியபடி, தான் கையில் வைத்திருந்த காலணியை (செருப்பு) அந்த இளம் பெண்ணின் முகத்தில் வீசி எறிகிறார். மேலும், அந்தப் பெண்ணை உடனே வீட்டை விட்டு வெளியேறுமாறு மாமனாரும் மாமியாரும் சேர்ந்து ஆக்ரோஷமாகக் கத்துகின்றனர்.

 

இந்தச் சம்பவத்தில் மாமியார் மற்றும் மாமனாரின் அராஜகப் போக்கு ஒருபுறம் கண்டனத்திற்கு உள்ளாகிய நிலையில், அங்கு நின்றுகொண்டிருந்த கணவனின் பொறுப்பற்ற நடத்தை நெட்டிசன்களை மேலும் கொதிக்க வைத்துள்ளது. தனது மனைவி கண்முன்னே தாக்கப்படும் போது, அதைத் தடுத்து நிறுத்தாமல் அந்த நபர் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறார்.

“நாம் ஏன் தனியாக வாடகைக்கு வீடு எடுத்துச் செல்லக் கூடாது? உங்கள் அம்மா என் முகத்தில் செருப்பால் அடிக்கும்போது உங்களால் எப்படி சும்மா நிற்க முடிகிறது?” என்று மனைவி கதறியதற்குக் கணவனோ, “நாளைக்கு எனக்கு லீவுதான், நீயே போய் ஒரு பிளாட் வாங்கி அங்க தங்கிக்கோ” என்று மிக அலட்சியமாகப் பதிலளிக்கிறார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, திருமணத்திற்குப் பிறகும் பெற்றோரின் நிழலிலிருந்து வெளிவராமல், மனைவியைக் காக்கத் தவறும் இது போன்ற ஆண்களுக்குச் சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.