சேலம் மாவட்டத்தில் உள்ள மிளகாய்காரனூர் பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ்ராஜ் என்ற மகன் உள்ளார். கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சோபா என்ற இளம் பெண்ணிடம் சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பிரகாஷ்ராஜ் 7 லட்ச ரூபாய் வாங்கி கொண்டார். இதே போல் சோபாவின் நண்பர் சக்திவேல் என்பவரிடம் 4 லட்ச ரூபாயை பெற்று கொண்டு வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் சோபாவும், சக்திவேலும் பணத்தை திரும்பத் தருமாறு கேட்டனர்.

ஆனால் பிரகாஷ்ராஜ் பணம் கொடுக்காமல் இருவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பிரகாஷ்ராஜை கைது செய்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மோசடி செய்த பணத்தில் பிரகாஷ்ராஜ் மினி பஸ் மற்றும் சொகுசு கார் வாங்கியது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.